Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Monday, February 16, 2015

வட மாகாண சபையுடன் இணைந்து செயற்பட தயார்: கரு ஜயசூரிய


வட மாகாண சபையுடன் இணைந்து செயற்பட தயார்: கரு ஜயசூரிய
[ திங்கட்கிழமை, 16 பெப்ரவரி 2015, 12:10.27 PM GMT ]
வடக்கு மாகாண சபையுடன் இணைந்து செயற்பட தயாராக இருக்கின்றோம் என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
வடமாகாண அபிவிருத்தி விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.
இங்கு உரையாற்றியபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,
நாட்டு மக்கள் சுதந்திரத்துடனும் அமைதியுடனும் வாழ்வதற்கான சூழல் உருவாகியுள்ளது.
வட மாகாணத்தின் கடன்களை வடமாகாணத்திற்கு கொடுப்பதற்கு, ஜனவரி 08 ஆம் திகதி மக்கள் ஒரு ஆணையை வழங்கியிருக்கின்றார்கள்.
சமாதானமான சூழலில் ஒற்றுமையாக வாழ்வதற்கு வடமாகாண மக்களின் பிரச்சினைகளை பற்றி கதைப்பதற்கு வரவில்லை. கொள்கைகள் பற்றி கதைப்பதற்கே வருகை தந்துள்ளேன்.
பதவி ஏற்ற பின்னர் எவ்வாறு செயற்பட வேண்டும். நாட்டில் உள்ள பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்க வேண்டும் என்று கலந்து ஆலோசிக்கின்றோம். எந்த வகையான பிரச்சினைகளாக இருந்தாலும் கலந்துரையாடல்கள் மூலம் தீர்த்துக் கொள்ள முடியுமென்ற நம்பிக்கை இருக்கின்றது.
மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்கள் முன்நின்று செயற்பட்டால் மக்களுக்கு தேவையானவற்றினை செய்ய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
வடமாகாண முதலமைச்சர் கூறிய விடயங்களை படிப்படியாக செய்ய முடியும். எமது அரசாங்கத்தின் நோக்கம் எமது மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைத்து ஐக்கியத்தினை கட்டி எழுப்புவதாகும்.
கடந்த காலத்தினை பற்றி கதைப்பதை விட்டு நிகழ்காலத்தினையும், எதிர்காலத்தினைப் பற்றி கதைப்பதே சிறந்ததென நினைக்கின்றேன்.
உங்களுக்கு கிடைக்க வேண்டியவைகள் கடந்த காலத்தில் கிடைக்கவில்லை. ஆனால் அவற்றினை நாங்கள் உடனே பெற்றுத் தருவோம். நிதியினை மிகவும் சிக்கனமாக செலவிடுவதற்கு முன்வந்துள்ளோம். மக்களின் நிதியினை எவ்வாறு பயன்படுத்துகின்றோம் என்று கேட்பதற்கு உரிமை இருக்கின்றது.தகவல் அறியும் சட்டத்தினை உருவாக்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 24 ஆம் தகதி சட்டமாக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
நேர்மையான முறையில் செயற்பாடுகளை முன்வைத்துக் கொண்டிருக்கின்றோம். வட மாகாணத்தில் மட்டுமன்றி ஏனைய மாகாணங்களிலும் வேலையில்லா பிரச்சினை இருக்கின்றது.
இலங்கையில்தான் அதிகமான வேலையாட்கள் இருக்கின்றார்கள். 16 பொது மக்களுக்கு ஒரு அரச ஊழியர் இருக்கின்றார். எமக்கு தேவையான அதிகாரங்களை உருவாக்க வேண்டும்.
மரத்தடிகளில் பட்டதாரிகள் தமது வாழ்க்கையை போக்குவதை காணக்கூடியதாக இருக்கின்றது. வேலையில்லாதவர்களின் வெற்றிடங்கள் வருடத்திற்கு வருடம் நிரப்பப்பட்டு வருகின்றது.
வெற்றிடங்களை நிரப்புவதற்கு பல திட்டங்களை வகுக்க வேண்டும். அரச ஊழியர்களுக்கான பயிற்சிகளை வழங்குவதற்கு வேலைத்திட்டம் ஒன்றினை செய்ய இருக்கின்றோம். முகாமைத்துவ உதவியாளர்களுக்கான பயிற்சிகளை வழங்க திட்டம் ஒன்று வகுக்கப்பட்டுள்ளது.
மாகாண சபையில் கண்ட பலவீனம் என்னவெனில், அரசினால் கொடுக்கப்படும் பணத்தினை உரிய முறையில் செலவு செய்ய வேண்டும். அந்த முறை மாற வேண்டும்.
வடமாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கான செயற்திட்டங்களை உரிய முறையில் வழங்குவதற்கு சந்தர்ப்பம் கிடைக்குமென நினைக்கின்றேன்.
மக்கள் ஜனநாயகமாகவும், சுதந்திரமாகவும் வாழ்வதற்கான ஒரு சூழல் உருவாகும் என நினைக்கின்றேன். யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த போது பல விடயங்கள் ஞாபகத்திற்கு வந்தன.
1962 ஆம் ஆண்டு முதல் இராணுவ அதிகாரியாக கடமையாற்றினேன். அப்போது, பயங்கரவாதம் இல்லை. அதனால், தமிழ் - சிங்கள - முஸ்லீம் மக்களுடன் ஒற்றுமையுடன் படித்து விளையாடி வந்தோம். ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்ற கொள்கையுடன் வாழக்கூடிய சூழ்நிலை உருவாக்கின்றது. மத்திய அமைச்சு என்ற வகையில் வடமாகாண சபையுடன் இணைந்து செயற்பட தயாராக இருக்கின்றோம்´ என்றார்.
இந்நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், வடமாகாண ஆளுநர் பள்ளிஹார, மகளீர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், வடமாகாண எதிர்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா உட்பட வடமாகாண அமைச்சர்கள் மற்றும் 5 மாவட்ட அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
இதேவேளை வடமாகாண உள்ளூராட்சி சபைகளுக்கான வாகனங்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.