மஹிந்த அரசாங்கம் கே.பி.யை பாதுகாப்பாக அனுப்பி வைத்துள்ளது : ராஜித
JAN 10, 2015
அரச பயங்கரவாதம் காரணமாக இலங்கையில் இருந்து வெளிநாட்டுக்கு புகலிடம்கோரிச் சென்றிருக்கும் ஊடகவியலாளர்கள் அனைவரையும் மீண்டும் நாட்டுக்கு வருமாறு பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன அழைப்பு விடுத்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிய அரசாங்கம் அமையப்பெற்றுள்ள நிலையில் ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தின் முதலாவது செய்தியாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த செய்தியாளர் மாநாட்டில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
“அரச பயங்கரவாதம் காரணமாக இலங்கையில் இருந்து வெளிநாட்டுக்கு புகலிடம்கோரிச் சென்றிருக்கும் ஊடகவியலாளர்கள் அனைவரையும் மீண்டும் நாட்டுக்கு வாருங்கள். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிய அரசாங்கம் அமையப்பெற்றுள்ள நிலையில் ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.
அத்துடன், ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள் மீது அடக்குமுறைகள் அல்லது தாக்குதல்கள் இடம்பெற்றால் அதற்கு எதிராக உடனடியான நடவடிக்கை எடுக்கப்படும். ஊடகவியலாளர்களுக்கான எழுதும் சுதந்திரம் உறுதிப்படுத்தப்படும்.
எனவே, அச்சத்தின் காரணமாக வெளிநாடுகளில் வசிக்கும் ஊடகவியலாளர்கள் மீண்டும் நாட்டுக்கு வந்து, உங்களது ஊடகப்பணியை தொடருங்கள்.
அதேவேளை, அரசாங்கத்தின் விருந்தாளியாக இருந்த கே.பி. இந்த நாட்டில் தப்பிச்சென்றுள்ளார். அவரை மஹிந்த அரசாங்கம் பாதுகாப்பாக அனுப்பி வைத்துள்ளது.
இன்னும் பலர், இந்த நாட்டில் இருந்து தப்பிச் செல்வதற்கு தயாராக இருக்கின்றார்கள். அவர்கள் குறித்த விபரங்களை இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடுவோம்” என்றும் கூறினார்.