கிளிநொச்சியில் இராணுவத்தினரின் நில அபகரிப்பால் வீட்டுத்திட்ட நடவடிக்கைகள் பாதிப்பு!
குளோபல் தமிழச் செய்திகளின் விசேட செய்தியாளர் - 2ஆம் இணைப்பு:-
புகைப்படம்: கிளிநொச்சி சிவபுரம்:-
17-04-2014 - 19:14amகிளிநொச்சி மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் வீட்டு திட்ட நடவடிக்கை பாதிக் கட்டத்தையும் தாண்டவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் அலுவலகத்தில் இன்று நடந்த கலந்துரையாடலில் இந்த விடயம் விவாதிக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டத்திற்கு ஏழாயிரம் வீடுகள் இந்திய வீட்டுத்திட்டுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டன. அவற்றில் இதுவரையில் மூவாயிரம் வீடுகளே கட்டப்பட்டுள்ளன என்று தெரிவித்த கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் அவற்றில் பல வீடுகள் இன்னமும் கட்டி முடிக்கப்படாத நிலையில் உள்ள என்றும் குறிப்பிட்டார்.
வீட்டுத்திட்ட நடவடிக்கையில் பல்வேறு அரசியல்கள் காணப்படுவதினால் தொடர்ந்தும் இடையூறுகளைத் தாண்டியே நடவடிக்கைகள் தொடர்வதாக கிராம அலுவலர்கள் குறிப்பிடுகின்றனர். குறிப்பாக இலங்கை அரச படைகள் முன்னெடுக்கும் நில அபகரிப்பின் காரணமாகவே வீட்டுத்திட்ட நடவடிக்கைகள் தாமதமாவதாக தெரிவிக்கப்படுகிறது.
இராணுவத்தினர் வீட்டுத்திட்ட காலத்தில் காணிகளை அபகரிக்கும் நோக்குடன் மக்களை பிரச்சினைகளுக்கு உள்ளாக்கி வருவதாக கூறப்படுகிறது. சில அரச அதிகாரிகள் இராணுவத்தினரதும் அரசியல்வாதிகளினதும் இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைத்து மக்களை நெருக்கடிக்குள் தள்ளுவதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத அரச அதிகாரி ஒருவர் குளோபலுக்குத் தெரிவித்தார்.
இராணுவத்தினர் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களையும் நகரத்தை அண்டிய சில கிராமங்களின் சில பகுதிகளையும் தமக்கு வழங்க வேண்டும் என்று அரச அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர். இதனால் குறித்த காணிகளை இராணுவத்திற்காக அபகரிக்க அரச அதிகாரிகள் சில காரணங்களை சொல்லி வருகின்றனர்.
சலசலப்புக்களைத் தாண்டியே வீட்டுத்திட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சிப் பகுதியில் மிள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு நான்கு வருடங்கள் ஆகின்றமை குறிப்பிடத்தக்கது. நகரை அண்டிய சில இடங்களிலும்கூட இன்னமும் வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படவில்லை.
தொடர்ந்தும் கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் மக்கள் தற்காலிக கூடாரங்களில் வசித்து வருகின்றனர். இந்த கூடாரங்கள் மக்கள் வசிக்க ஒகந்ததலல்ல என்றும் அதனால் நோய்கள் ஏற்படும் என்றும் குறித்த வீடுகளை அமைத்த தொண்டு நிறுவனங்கள் தெரிவித்திருந்தமையை அண்மையில் குளோபல் தமிழ் செய்திகள் வெளியிட்டிருந்தது.
வீட்டுத்திட்ட பிரச்சினைகளை தீர்த்து விரைவில் வீடுகளை அமைத்து முடிக்க வேண்டும் என்று இன்றைய கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது. திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியில் சிக்கனமாகவும் விரைவாகவும் வீடுகள் கட்டி முடிக்கப்பட வேண்டும் என்று கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் தெரிவித்தார்.
அத்துடன் விரைவில் அடுத்த கட்ட பயனாளிகளுக்கான வீட்டுத்திட்டம் தொடங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
