நம்பத்தகுந்த சர்வதேச பொறிமுறை ஒன்றை ஏற்படுத்தினால் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்ள ஆதாரங்களை பகிர்ந்து கொள்ள தயார்- ஜஸ்மின் சூக்கா:

இலங்கை அரசாங்கம் நம்பகத்தன்மை மிக்க சர்வதேச பொறிமுறையொன்றை ஏற்படுத்தினால் இலங்கையில் தொடர்ந்தும் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து தன்னிடம் உள்ள ஆதாரங்களை இலங்கை அரசாங்கத்துடன் பகிர்ந்துகொள்ள தயார். என ஜஸ்மின் சூக்கா தலைமையிலான உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச திட்டம் என்ற சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.
அரசாங்கம் தனது படையினரால் இழைக்கப்பட்ட ஆள்கடத்தல்,சித்திரவதை.வல்லுறவுச்சம்பவங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள விரும்பினால் அதனிடம் போதுமான தகவல்கள் உள்ளன, எங்களது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து உடனடியாக விசாhரணைகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும்,
நாங்கள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்த விபரங்களை தங்களுடன் பகிர்ந்து கொள்ளாததால், தங்களால் அறிக்கை குறித்து விசாரணைகளை மேற்கொள்ள முடியாது என இலங்கை அரசாங்க பேச்சாளர் ஓருவர் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றார்.
இலங்கை அரசாங்கம் தனது மக்களிற்கு எதிராக இழைக்கப்பட்ட நீண்ட கால சர்வதேச குற்றங்கள்,மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்வதற்காக பாதிக்கப்பட்டவர்களிற்கு நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய சர்வதேச பொறிமுறையை ஏற்படுத்தும் பட்சத்தில் இலங்கை அரசாங்கத்துடன் ஒத்துழைக்க நாங்கள் தயாராகவுள்ளோம் என அந்த அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.