'குடிநீரில் பார உலோகங்கள் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது'
சுன்னாகம் பகுதியில் எண்ணெய்க்கலப்புள்ள குடிநீரில் பார உலோகங்கள் இருப்பது ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக வடமாகாண நீர்வழங்கல் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சனிக்கிழமை (13) தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
வடமாகாண முதலமைச்சர் தலைமையில் சுன்னாகம் பிரதேச சபையில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கழிவு எண்ணெய் தொடர்பான பிரச்சனை கலந்துரையாடப்பட்டு, இது தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள 18 பேர் கொண்ட ஒரு குழு உருவாக்கப்பட்டது.
இக்குழு பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் களநிலை மாற்றங்களை அவதானித்து வாராந்த கூட்டத்தில் எமக்கு தெரியப்படுத்துவார்கள். இதன் வாராந்த கூட்டம் வெள்ளிக்கிழமை (12) நடைபெற்றது.
அதில் தற்போது அப்பகுதியில் பாதிக்கப்பட்ட கிணறுகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக கூறியுள்ளார்கள். அப்பிரதேச மக்களுக்கு உடனடி தீர்வாக நீர் வழங்கலை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளோம்.
பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள அனைத்து சிற்றுண்டிச்சாலைகளும் பயன்படுத்துகின்ற கிணறுகளை உடனடியாக பரிசோதனை செய்வதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு எண்ணெய்த் தொற்று இருந்தால் உடனடியாக தண்ணீர் பெறுவதற்கான மாற்று ஏற்பாடு செய்யப்படவுள்ளது.
மத்திய அரசாங்க சுற்றாடல் அதிகாரசபைக்கு தெரியப்படுத்தியுள்ளோம். அவர்கள் ஆசிய அபிவிருத்தி வங்கி ஊடாக ஆய்வு, சுத்திகரிப்பு, மேலதிக பல திட்டங்களுக்கு என 390 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம்.
ஆய்வு ரீதியாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மேலதிகமாக நிபுணர்கள் கொண்ட குழு ஒன்றை அமைப்பதற்கு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதை ஏற்றுக்கொண்டு அடுத்து வருகின்ற அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பாக ஒரு முடிவு எடுப்பதாக உள்ளேன்.
இது உடனடியாக தீர்க்கப்படக்கூடிய பிரச்சனை இல்லை நீண்டகால நோக்கத்தில் தீர்க்கப்படவேண்டிய விடயம். ஆனால் இது போன்ற பாதிப்புக்கள் ஏற்படுத்துகின்ற திட்டங்கள் எமது பிரதேசத்தில் இனி நடைபெற கூடாது என்று அவர் தெரிவித்தார்.