Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Saturday, November 19, 2016

தொடரும் சர்ச்சை : மங்களராமய விகாராதிபதியின் மற்றுமொரு காணொளி வெளியானது : மட்டு. அரச அதிபரிடம் ஆக்ரோஷம்

Published by MD.Lucias on 2016-11-17
யுத்த காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு  உணவு வழங்கி அவர்களின் காயத்திற்கு மருந்திட்ட என்னை புலி பயங்கராவதி என கூறி எனக்கெதிராக தேரரொருவரே வழக்குத்தாக்கல் செய்தார். அதேபோல தற்போது என்னுடைய மக்களின் பிரச்சினைகளுக்காக  போராடும் என்னை இனவாதி என பட்டிப்பளை பிரதேச செயலாளரும், மட்டக்களப்பு கிராம உத்தியோகத்தரும் மக்களிடம் பொய்கதைகளை சித்தரித்து வருகின்றனர். 
இதன் காரணமாக வெளிநாட்டில் உள்ளவர்கள் புலி கொடியை ஏந்தியவாறு என்னை கொலை செய்வேன் என இலட்சக் கணக்கான குறுந்தகவல்களை அனுப்புகின்றனர். எனது மக்களுக்காக நான் இறப்பதற்கும் தயாராக உள்ளேன். இவ்வாறான செயற்பாடுகளுக்கு அஞ்சியவன் நானல்ல என்று மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி சுமனரத்த தேரர் தெரிவித்துள்ளார்.
கிராமசேவகரின் ஊடாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள ஆறு சிங்கள குடும்பங்களுக்கு நீதியை பெற்றுத்தருமாறு வலியுறுத்திய மகஜர் ஒன்றை மட்டு அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சார்ள்ஸிடம் கையளித்து விளக்கமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நான் இனவாதியோ மதவாதியோ அல்ல. தமிழர்களுக்கு எதிரானவனும் அல்ல. சிங்கள மக்களின் உரிமைகளுக்கே போராடுகிறேன். நான் இனவாத ரீதியில் செயற்படுவதாக செய்திகள் பரப்பட்டுள்ளதால் என்னை கொலை செய்யப்போவதாக வெளிநாட்டில் உள்ளவர்கள் இலட்சக்கணக்கான குறுந்தகவல்களை அனுப்பி கொண்டு இருக்கின்றனர்.
மட்டக்களப்பில் மேய்ச்சல் தரை பிரச்சினை இருந்து வருகிறது. அதேபோன்று சிங்களவர்களுக்கு காணிப் பிரச்சினை இருக்கின்றது. இது தொடர்பில் போராட்டம் நடத்திய சிங்களவர்கள் மீது அச்சுறுத்தல் விடுத்த பட்டிப்பளை பிரதேச செயலாளரும் கிராம உத்தியோகத்தரும் தற்போது ஆறு குடும்பங்களுக்கு எதிராக வழங்கு தொடர்ந்துள்ளனர்.
இவ்வாறு வழக்கு தொடரப்பட்டவர்களில் சிலர் தந்தை இன்றி தமது பிள்ளைகளுடன் தனியாக வாழ்ந்து வருகின்றனர். பான் கூட வாங்க முடியாத இந்த அப்பாவி மக்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்து அம் மக்களை காணியிலிருந்து வெளியேறுமாறும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
இவர்களுக்கு எந்தவிதமான உதவிகளும் இல்லாததால் நானே அவர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுத்துள்ளேன்.
இவ்வாறு உதவி இன்றி இருப்பவர்களிடம் தற்போது இருக்கும் வீட்டையும் விட்டு வெளியேறுமாறு கூறினால் அவர்கள் எங்கு செல்ல முடியும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
நான் அந்த குடும்பங்களுக்காகவும் சிங்கள மக்களின் உரிமைகளுக்காகவுமே போராடுகிறேன். இது மாத்திரமன்றி விகாரைகளுக்கு சொந்தமான நிலப்பிரதேசங்களை இன்று நெற்செய்கைக்காக பயன்படுத்துகின்றனர்
இந்நிலைமைகள் மோசமானவை. இவற்றுக்கு நியாயம் பெற்றுக் கொடுக்க நினைத்ததினாலேயே நான் இன்று உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றேன். 
நான் அவதூறு பேசுவதாகவும் இனவாதம் மதவாதம் பேசுவதாகவும் பிரதேச செயலாளரும், கிராம உத்தியோகத்தரும் தமிழ் மக்களிடத்தில் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். நான் இனவாதியும் அல்ல மதவாதியும் அல்ல.
என்னை கொலை செய்தாலும் பரவாயில்லை. ஆனாலும் எனது மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். தற்போது வழக்கு பதியப்பட்டுள்ள ஆறு குடும்பத்தவர்களுக்கும் தாங்கள் நியாயம் வழங்க வேண்டும். தங்களை நான் அச்சுறுத்தவில்லை. மாறாக கோரிக்கையாகவே முன்வைக்கின்றேன். 
இப்பகுதியில் தமிழ், முஸ்லிம் அதிகாரிகளே அரச சேவையில் உள்ளனர். சிங்கள அரச அதிகாரிகள் இல்லை என்பதால் எம்மக்களுக்கும் பாரபட்சம் இன்றி நீங்கள் உதவ வேண்டும்.
இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை இந்த அப்பாவி மக்களுக்கு எதிராக யாரும் செயற்பட வேண்டாம்.
ரஜமகா விகாரையை ஒவ்வொரு நாளும் மண்ணால் மூடிகொண்டு வருகிறார்கள். இதுவா நல்லாட்சி? இன்னும் ஒரு மாதம் மாத்திரமே பொறுத்திருந்து பார்ப்போம். நாங்கள் எல்லோரும் இறப்பதற்கும் தயாராக உள்ளோம்.
தமிழ் சிங்கள மக்கள் அடித்துக்கொள்ள வேண்டும் என்பதே இவர்களின் தேவை. கருப்பு பட்டி அணிந்து ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என்றார்.
எனவே எமக்கு நியாயமான பதிலை நீங்களே பெற்றுத்தரவேண்டும் என தெரிவித்து அரச அதிபரிடம் மகஜரை கையளித்தார்.
இந்நிலையில் விகாராதிபதியின் ஆக்ரோஷமான விளக்கத்தை அவதானித்துக் கொண்டிருந்த அரச அதிபர் சார்ள்ஸ் அமைதியாக நின்றிருந்தவாறு மகஜரை பெற்றுக்கொண்டார்.