யாழ் பல்கலை விடுதிக்குள் நுழைந்து மரண அச்சுறுத்தல் விடுத்த காவல்துறையினர்
யாழ் பல்கலைக்கழக மாணவர் விடுதிக்குள் நேற்று இரவு 11.48 மணியளவில் திடீரென நுழைந்த காவல்துறையினர் மாணவர்களை மிரட்டியதுடன், மரண அச்சுறுத்தலும் விடுத்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் ரஜீவன் தெரிவிக்கையில்,
நேற்றைய தினம் மாணவன் ஒருவனின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக ஏற்பாடுகளைச் செய்துவிட்டு ஏனைய மாணவர்களையும் நிகழ்வுக்கு அழைத்தபோது, அங்கே திடீரென காவல்துறையினர் உள்நுளைந்தனர்.
உள்நுளைந்த காவல்துறையினர் மாணவர்களை அச்சுறுத்தியதுடன் 119 என்ற இலக்கத்திலிருந்து தமக்கு அழைப்பு வந்ததன் காரணத்தினாலே தாம் இங்கு வருகை தந்ததாக இராணுவத்தினர் தெரிவித்ததாக ஒன்றியத் தலைவர் தெரிவித்தார்.
இந்நிலையில், அங்கு வந்த காவல்துறையினரிடம், பல்கலைக்கழகத்துக்குள் எவ்வாறு நீங்கள் துப்பாக்கியுடன் வரமுடியும் என நான் வினவியபோது, துப்பாக்கியை நீட்டி சுட்டு விடுவோம் என காவல்துறையினர் மாணவர்களை அச்சுறுத்தினர்.
அத்துடன், தனதும் தனது நண்பன் ஒருவரின் பெயர் விலாசங்களையும் பெற்றுச் சென்றதாகவும் ரஜிவன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் விடுதி பொறுப்பாளரிடமும் பல்கலைக்கழக துணைவேந்தரிடமும் முறைப்பாடுகள் செய்யப்படுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது