மன்னார் முசலி பிரதேச பகுதியில் பதற்றம் - கடற்படையினர் மக்களை நோக்கி துப்பாக்கி பிரயோகம்

October 18, 2016
மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அரிப்பு கிராமத்தில் சற்று முன்னர் கடற்படையினருக்கும், பொது மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடற்படையினர் பொது மக்களை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அரிப்பு கிராமத்தில் கடந்த சில தினங்களாக கொள்ளைச் சம்பவங்கள் இடம் பெற்று வந்த நிலையில் இன்று இரவு 9.30 மணியளவில் குறித்த கிராமத்தில் உள்ள வீடு ஒன்றினுள் நபர் ஒருவர் செல்ல முற்பட்டடுள்ளார்.
எனினும், வீட்டில் உள்ளவர்கள் அவரை கண்டு சத்தமிட்டுள்ளனர். இதன் போது குறித்த நபர் உடனடியாக அருகில் உள்ள பற்றைக்காட்டினுள் மறைந்திருந்த நிலையில் கிராம மக்கள் ஒன்றிணைந்து குறித்த நபரை பிடித்துள்ளனர்.
எனினும், குறித்த நபரை காப்பாற்றும் முயற்சியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ள நிலையில், கிராம மக்களுக்கும் கடற்படையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடற்படையினர் மக்களை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். பிடிக்கப்பட்ட குறித்த நபர் கடற்படையினை சேர்ந்த ஒருவராக இருக்கலாம் என பொது மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த நபரை தடுத்து வைத்துள்ளனர். தற்போது பொலிஸார் அங்கு விரைந்து சென்றுள்ளனர். எனினும் குறித்த நபரை பொலிஸாரிடம் ஒப்படைக்க முடியாது எனவும், மன்னார் நீதவானிடம் நேரடியாக ஒப்படைக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, சிலாபத்துறை பொலிஸார் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளும் அங்கு விரைந்து சென்றனர். நீண்ட நேரம் மக்கள் மத்தியில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் மக்களுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சு வார்த்தையின் பலனாக மக்களினால் சிறை பிடிக்கப்பட்ட சந்தேகநபர், சிலாபத்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படதாக வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரனி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா தெரிவித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து அங்கு அமைதி நிலை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளை, கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் திருட்டுச்சம்பவம் இடம் பெற்றது.
வீட்டினுள் வந்த மர்ம நபரை துரத்திய போது சந்தேகநபர் கொண்டு வந்த பாரிய கத்தியினால் வெட்டிய போது அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.