தென்னிலங்கை வியாபாரிகளின் அத்துமீறல் தடுக்கப்படவேண்டும் ; வர்த்தகர் சங்க தலைவர் வேண்டுகோள்
வலி.தெற்கு பிரதேச சபை எல்லைக்குள் தென்னிலங்கையில் இருந்து வருகை தந்து வியாபாரத்தை மேற்கொள்ளும் நடைபாதை வியாபாரிகளை உடன் அப்புறப்படுத்துமாறு வலி.தெற்கு வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவரும் லயன் சி.ஹரிகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வலி.தெற்கு பிரதேச வர்த்தகர்கள் சம்மேளனத்தின் பொதுக்கூட்டம் பிரதேசசபை மண்டபத்தில் வலி.தெற்கு பிரதேசசபையின் தவிசாளர் தி.பிரகாஷ; தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட பின்னர் தலைமை உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர்,
எமது பிரதேசத்தின் வர்த்தகர்கள் இன்று பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளார்கள். தென்பகுதிகளில் இருந்து இங்கு வந்து வியாபாரம் செய்யும் நடைபாதை வியாபாரிகளால் எமது வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள்.
இலட்சக் கணக்கில் முதலிட்டு, பிரதேச சபைக்கு வருடாவருடம் முறையாக வியாபார அனுமதி பெற்று உரிய முறையில் இவர்கள் வியாபாரத்தை நடத்துகின்றார்கள். ஆனால், தென்னிலங்கையில் இருந்து வருகைதரும் வியாபாரிகள் பிரதேச சபையிடம் வியாபார அனுமதி பெறாது, பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடைஞ்சலை ஏற்படுத்தும் வகையில் உடு புடைவைகளையும், மின் உபகரணங்களையும் மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்கின்றார்கள். இதனால், பெரும் முதலீடு செய்த எமது வியாபாரிகள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இவர்களால் எமது வர்த்தகப் பெருமக்கள் பெரும் இடர்களையும் அசௌகரியங்களையும் எதிர்கொள்கின்றனர்.
வர்த்தகர்களின் பிரச்சினைகள் தொடர்பாகக் குரல் கொடுப்பதுக்கு பிரதேசத்தில் வர்த்தகர் சங்கம் இல்லாதமை பெரும் குறையாகக் காணப்பட்டுள்ளது. ஸ
அண்மைக் காலங்களில் வியாபார நிலையங்கள் பலவற்றில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், இவை தொடர்பாக எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. வர்த்தகர் சங்கத்தின் ஒருங்கமைந்த செயற்பாட்டினூடாக வர்த்தகர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என தெரிவித்தார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=625703392604310934#sthash.2AL7yrzB.IqaqSwku.dpuf