2014-09-06 13:11:56 | General
இலங்கை அரசாங்கம் ஜப்பானுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாதுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கைக்கான ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசியிடம் எடுத்துரைக்கவுள்ளது.
2002 ஆம் ஆண்டு இலங்கைக்கான ஜப்பானின் விசேட தூதுவராக யசூசி அகாசி நியமிக்கப்பட்ட நிலையில் 24ஆவது தடவையாக நேற்று வெள்ளிக்கிழமை இலங்கை வந்தார். இந் நிலையில் யசூசி அகாசிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையிலான சந்திப்பு இன்று சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இச்சந்திப்பின்போது தற்போதைய நிலைமைகள் குறித்தும் இலங்கை அரசாங்கம் ஜப்பானுக்கு அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமை குறித்தும் எடுத்துரைக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இதேவேளை, நாளை ஞாயிற்றுக்கிழமை ஜப்பானிய பிரதமர் இலங்கைவரவுள்ள நிலையில் அவர் அன்றைய தினம் அரசியல் கட்சிகளின் தலைவர்களைச் சந்திக்கவுள்ளார். தமிழரசுக் கட்சியின் மகாநாடு 7ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதால் ஜப்பானிய பிரதமருடனான சந்திப்பில் கூட்டமைப்பினர் பங்குகொள்ளாமையினால் பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் அகாசியிடம் தெரிவிக்கப்படவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.