யாழ்.குடாநாட்டில் தொடரும் நில ஆக்கிரமிப்பு பற்றி தனக்கு ஏதும் தெரியாதென்கிறார் அரச அதிபர் :
உலக தமிழ்ச் செய்திகள்
யாழ்.குடாநாட்டில் தொடரும் நில ஆக்கிரமிப்பு பற்றி தனக்கு ஏதும் தெரியாதென அரசாங்க அதிபர் சுந்தரம் அருமை நாயகம் சாதிக்க தனக்கு அறிக்கை சமர்ப்பிக்க கோரியுள்ளார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் இடம்பெற்ற காரசாரமான விவாதத்தின் போதே அரசாங்க அதிபர் தெரியாதென தெரிவிக்க அமைச்சரோ இப்போது தான் கேள்விப்பட்ட விடயம் போல அறிக்கை கோரியுள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று காலை 9.3௦0 மணியளவில் மாவட்ட ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தொடர் ஆரம்பமாகியிருந்தது. வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் டக்ளஸ் தேவானந்தா இணைத்தலைமையில் இக் கூட்டம் இடம்பெற்றிருந்தது. இதன்போது யாழ் மாவட்டத்தின் செயற்பாடுகள் பற்றி காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றன.
வலி.வடக்கு நில சுவீகரிப்பிற்கு மேலதிகமாக சேந்தான்குளம் கச்சாயென பல பகுதிகளில் கடற்படை நிலங்களை கையகப்படுத்த அறிவிப்புக்களை விடுத்துள்ளது. ஏற்கனவே இடம்பெற்ற நில சுவிகரிப்புக்களிற்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள நிலையில் தற்போது மேலும் மேலும் நிலச்சுவீகரிப்பு இடம்பெறுவதாக கூட்டமைப்பு தரப்பு குற்றஞ்சாட்டியது.
அவ்வேளையில் குறிக்க அமைச்சர் புதிதாக சுவீகரிக்கப்படும் நில பகுதிகள் பற்றி அரச அதிபரிடம் விளக்கம் கேட்க அரச அதிபரோ தமக்கு இது பற்றி தெரியாதென்றார்.அனைத்து சுவீகரிப்பு அறிவித்தல்களிலும் பிரதேச செயலர்கள் ஒப்பமிட்டுள்ளனர். அவ்வாறாயின் அவர்கள் தங்களின் கீழில்லையாவென கேள்வி எழுப்பினர் பிரதிநிதிகள்.அவ்வேளையிலேயே நில சுவீகரிப்பு பற்றி அறிக்கை சமர்ப்பிக்க கோரிக்கை விடுத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.