"இராணுவத்தில் சேர்ந்தமைக்காக மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் தற்கொலை""இராணுவத்தில் சேர்ந்தமைக்காக மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் தற்கொலை"
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 11 மே, 2014
மனைவியைக் கொன்றுவிட்டு, கணவன் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன.
இவர்களுக்கு இரண்டு மற்றும் நான்கு வயதுடைய இரண்டு குழந்தைகள் இருப்பதாக காவல்துறை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இருவருடைய சடலங்களும் கிளிநொச்சி வைத்தியசாலையில் பொலிசாரினால் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் பற்றி புதுக்குடியிருப்பு பொலிசார் தனக்கு அறிவித்ததை அடுத்து, சடலங்களைப் பார்வையிட்டு மருத்துவ பரிசோதனை செய்ததாக யாழ் மாவட்ட பதில் சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் சின்னையா சிவரூபன் தெரிவித்தார்.
மனைவியின் கழுத்து அறுத்து துண்டிக்கப்பட்டிருந்ததாகவும், கணவன் வீட்டின் பின்புறமுள்ள உயர்ந்த மரம் ஒன்றில் தூக்கிட்ட நிலையில் இறந்திருந்ததாகவும் அவர் மேலும் கூறினார்.
முப்பது வயதுடைய அருமைநாயகம் அருள்ராஜ், அவருடைய மனைவியாகிய அருள்ராஜ் ஜெயக்குமாரி ஆகிய இருவருமே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
தமிழ் இளைஞர் யுவதிகளை இராணுவம் சேர்த்தபோது, அருள்ராஜின் மனைவியும் சேர்ந்ததாகவும், அதனை அவர் விரும்பவில்லை என்றும், மனைவி வீட்டிற்கு வந்திருந்த போது ஏற்பட்ட தகராறையடுத்து இந்தச் சம்பவம் நடந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.