தமிழ் அமைப்புகளை தடைசெய்தால் இலங்கையே நெருக்கடியில் சிக்கும் எச்சரிக்கின்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

ஈழத்தமிழர்களின் நியாயமான தீர்வுக்காக சர்வதேச அரங்கில் அயராது குரல்கொடுத்து ஜனநாயக வழியில் போராடிவரும் தமிழர் அமைப்புகளை இலங்கை அரசு தடைசெய்தால் மேலும் நெருக்கடிகளை இந்த அரசு ஜெனிவாவில் சந்திக்க வேண்டிவரும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
ஜெனிவாத் தீர்மானத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சர்வதேச அரங்கில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவு திரட்டிய 15 புலம் பெயர் தமிழர் அமைப்புகளைத் தடை செய்வதற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவென்று அதன் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்; மஹிந்த அரசின் இந்த நடவடிக்கை ஜனநாயகத்துக்கு விழுகின்ற இன்னொரு அடியாகும்.
இந்த அரசு தடைசெய்யத் தீர்மானித்துள்ள 15 புலம் பெயர் தமிழர் அமைப்புகளும் உலகளாவிய ரீதியில் பிரபல்யம் பெற்ற அமைப்புகளாகும். இவற்றில் முக்கிய சில அமைப்புகள் உலக நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து ஈழத்தமிழர்களின் இருப்பைக் கருத்தில்கொண்டு மாநாடுகளைக்கூட நடத்தி வருகின்றன.
இவற்றை இலங்கையில் புலிச் சாயம் பூசி மஹிந்த அரசு தடை செய்யலாம். ஆனால், இந்த அமைப்புகள் செயற்படும் நாடுகளில் அவற்றைத் தடை செய்ய முடியாது. 15 புலம் பெயர் தமிழர் அமைப்புகளைத் தடை செய்தால் மேலும் 15 அமைப்புகள் புதிதாக உருவெடுக்கும் என் பதை மஹிந்த அரசு உணர வேண்டும்.
எனவே, இந்த அரசு இந்தத் திட்டத்தைக் கைவிட்டுவிட்டு முதலில் நாட்டின் இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காணும் வழியைத் தேட வேண்டும்'' என்று தெரிவித்தார்.