
25 மே 2015, திங்கள்
புங்குடுதீவு மாணவியின் கொலை ஒரு பாலியல் வேட்கை அடிப்படையில் மட்டும் நடந்த கொலை என்றோ தனி மனித விரோதங்கள் காரணமாக மட்டும் நடந்த கொலை என்றோ நம்பி விடமுடியாது.
இந்தக் கொலையின் பின்னால் ஒரு பெரும் உள்நோக்கம் கொண்ட மூலசக்தி இருந்துள்ளது என்றே கருதவேண்டியுள்ளது எனத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்.
கடந்த 21ஆம் திகதி நாடாளுமன்றில் ஆற்றிய உரையின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:
இன்று நான் இந்தச் சபையில் மிகவும் மனம் நொந்தநிலையிலும் ஆத்மார்ந்த கோபத்துடனும் உரையாற்றவேண்டிய நிலையில் உள்ளேன்.
புங்குடுதீவிலுள்ள பள்ளி மாணவி ஒருவர் சில மிருகத்தனமான நபர்களால் கடத் தப்பட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுப் படுபயங்கரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள்.
முழு மனித குலமுமே வெட்கித் தலைகுனிய வேண்டிய இழிச்செயல் இது என்பதில் நீங்கள் அனைவரும் என்னுடன் உடன் படுவீர்கள் என நம்புகிறேன்.
கடந்த காலங்களில் வடக்கில் சிறுமியர், மாணவிகள் உட்படப் பெண்களுக்குப் பாலியல் பாதுகாப்போ, உயிர்ப் பாதுகாப்போ இல்லாத ஒரு நிலை நிலவியது. அப்படியான சில குற்றங்களில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
இன்னும் சிலவற்றில் சிலர் கைது செய்யப்பட்டாலும் ஒரு சில நாள்களில் பிணையில் விடப்பட்டுச் சுதந்திரமாக நடமாடும் நிலை இருந்தது. ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின்பு இப்படியான கொடுமைகளிலிருந்து தமிழ்ப் பெண்களுக்கு விடிவு கிடைக்கும் என நாம் நம்பினோம்.
எமது நம்பிக்கையைச் சிதறடிக்கும் வகையிலும் அந்த இருண்ட யுகம் இன்றும் கலையவில்லை என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தும் வகையிலும் இந்த மனிதகுல விரோத நடவடிக்கை இடம் பெற்றுள்ளது.
காரைநகரில் சிறுமி ஒருத்தி கடற்படைச் சிப்பாய் ஒருவரால் ஏமாற்றிப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமை, பாலியல் தொந்தரவு காரணமாகத் தீவுப் பகுதியில் ஒரு மருத்துவ மாது தற்கொலை செய்தமை, நெடுங்கேணியில் பள்ளிச் சிறுமி ஒருத்தி படையினன் ஒருவனால் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டமை, கனகராயன் குளத்தில் ஒரு மாணவியின் கொலை என அடுக்கடுக்காக நடந்த பாலியல் கொலைகள் தொடர்பான சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் எவரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை.
இது சம்பந்தமாக எடுக்கப்பட்ட ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் இடம்பெற்றதாகத் தெரியவில்லை.
எனவேதான் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பாக நியாயபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கோரி வடபகுதியே கொதித்தெழுந்தது. இது ஒரு பாலியல் வேட்கை அடிப்படையில் மட்டும் நடந்த கொலை என்றோ தனி மனித விரோதங்கள் காரணமாக மட்டும் நடந்த கொலை என்றோ நம்பி விடமுடியாது.
இந்தக் கொலையின் பின்னால் ஒரு பெரும் உள்நோக்கம் கொண்ட மூலசக்தி இருந்துள்ளது என்றே கருதவேண்டியுள்ளது.
சந்தேக நபர் ஒரு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர் எனவும், மாணவியின் தாயார் அவருக்கெதிராகச் சாட்சி சொல்லியதாலேயே பழிவாங்கும் முகமாக மாணவி கொல்லப்பட்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இக் கொலையில் சம்பந்தப்பட்டதாகக் கொழும்பிலிருந்து வந்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சுவிஸ் நாட்டிலிருந்து திரும்பி வந்த ஒரு வரும் இதில் சம்பந்தப்பட்டவர் எனவும் அவர் சம்பவத்தைப் படமெடுத்தார் எனவும் கூறப்படுகிறது.
இதில் சம்பந்தப்பட்டவர் கொள்ளையில் ஈடுபட்டவர் என்றால் இவரின் கொள்ளைக் கோஷ்டி மற்ற நபர்கள் யார்? அவர்கள் வேறு எங்கு கொள்ளைகளில் ஈடுபட்டனர்.
அவர்கள் ஒரு தனியான கொள்ளைக் கோஷ்டியா அல்லது அவர்களை இயக்கும் பின்னணிச் சக்தி உண்டா? என்ற கேள்விகள் எழுகின்றன. இவர்கள் இந்தக் கொலையைத் தாங்களே செய்தார்களா அல்லது கூலிக்குச் செய்தார்களா என்பதும் அறியப்படவேண்டும்.
எனவே இந்தச் சம்பவம் தொடர்பாக ஆழமாக,துல்லியமாக எந்த ஒரு சக்தியினதும் அழுத்தங்களுக்கு உட்படாத வகையில் புலனாய்வு செய்யப்பட வேண்டும். கடந்த காலத்தில் இப்படியான சம்பவங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட திருப்தியற்ற நடவடிக்கைகள் போல இப்போதும் இருந்துவிடக் கூடாது.
அவ்வகையிலேயே குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் எனக் கோரி வடபகுதி முழுவதும் போராட்டங்கள் எழுச்சி பெற்றன. மாணவர்கள், ஆசிரியர்கள்,பல்கலைக்கழகச் சமூகம், வணக்கத்தலங்கள், பொதுநிறுவனங்கள் என வடபகுதியில் முழு மக்களுமே நீதி கோரி வீதியில் இறங்கினர். மக்கள் நீதியைக் கோரி ஜனநாயக வழியிலேயே தங்கள் போராட்டங்களை நடத்தினர்.
அதை யாரும் தடுக்கவும் முடியாது. தவறு எனக் கண்டிக்கவும் முடியாது. ஏனெனில் அது அவர்களின் மறுக்க முடியாத உரிமை. மக்களின் போராட்டங்கள் நியாயமானவை என்பதால் அவற்றுள் சில விமிகளால் திட்டமிட்ட முறையில் வன்முறை புகுத்தப்படுவதை ஏற்றுக் கொள்ளமுடியாது.
இவர்கள் உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப் படுவதையும் எவ்வித அழுத்தங்களுக்கும் உட்படாமல் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதைக் குழப்பவுமே இவ் வன்முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன என நான் திடமாக நம்புகிறேன்.
கடந்த செவ்வாயன்று ஒரு கோஷ்டியினர் யாழ்.நகரெங்கும் திரிந்து கடைகளையும், அரச காரியாலயங்களையும் பூட்டும்படி மிரட்டியமையை நாம் இங்கு சாதாரண விடயமாகப் பார்க்க முடியாது.
மக்கள் இயல்பாக எழுச்சி பெற்ற நிலையில் சில விமிகள் மேற்கொள்ளும் இப்படியான மிரட்டல்கள் வன்முறைக்கு இடப்பட்ட அத்திவாரமாகவே நான் கருது கிறேன் என்றார்.